நீரின் முக்கியத்துவம்: இந்த உலகில் பிறந்த எல்லா உயிரினங்களும் நீரின் தேவையை ஏதோ ஒரு வகையில் பெற்ற வண்ணமே உள்ளன. அடிப்படைத் தேவைகளில் ஒன்றான நீர், மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானதாகும்.
சாதரணமாக ஒரு மனிதன் நீர் இன்றி 3- 5 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. நிறம், மனம், சுவை ஆகிய எக்குணமும் அற்ற இயற்கை வளங்களுள் அரியதுமான நீரானது அதன் முக்கியத்துவத்தை ஒவ்வொரு சந்தர்பத்திலும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது. அந்த வகையில்,
ஐம் பூதங்களுள் ஒன்றாக கருதப்படும் நீரானது ஆதிகாலம் தொடக்கம் இன்றைய நாகரீக காலம் வரை பல்வேறு வழிகளிலும் எமக்கும் பிற உயரிகளுக்கும் பயன்பட்டு வருகின்றது. இதனால்தான் “நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவன் பாடியுள்ளான். மேலும், மேலைத்தேய நாட்டு அறிஞ்சர்களுள் ஒருவர் “நீர் எழுப்பும் ஒலி மானுடத்தின் இசை ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமன்றி உலக வரலாற்றைக் கூட கண்ணுற்று நோக்கும் போது நைல் நதி, சிந்து நதி, யூப்ரடீஸ் போன்ற நாகரீகங்களின் பிறப்பிடத்தை நோக்கினால் நீர் நிலைகளே அடிப்படையாக கொள்ளப்படுகின்றது. இந் நாகரீகங்களின் எழுச்சி நீரின் மூலமே வெளிப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
பூமியில் எல்லா உயிரினங்களும் தோன்றும் முன்பே நீரானது தோன்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம் மட்டுமே. மீதமிருக்கும் 70% உம் நீர்ப்பரப்பாக இருந்தாலும் அதில் 97.5 % உப்பு நீராகத்தான் காணப்படுகின்றது. இதில் நிலத்தடி நீர் 2.5% உம் அதில் பனிப்பாறைகளாக உள்ளவை போக மீதம் 0.26% உம் நன்னீர் பரப்பாகும்.இந்த நீரைத்தான் உலகில் உள்ள மக்கள் அனைவரும் தமது தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் 110 கோடிக்கும் மேற்பட்ட மக்களில் 80 நாடுகளில் வாழும் 40% மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும், அதிகரித்து வரும் மனித வர்கத்தினருக்கு எதிர் காலங்களில் நீர் ஓர் சவாலாகவும் அமையலாம் என கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும் ஒரு எழுத்தாளன் குறிப்பிடுகையில் மூன்றாம் உலகப் போர் நடைபெருமாக இருந்தால் அது நீருக்காக மாத்திரமே நடை பெரும் என்றும், உலகில் மூவரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை எனவும் ஆய்வு மையம் குறிப்பிடுவதுடன் நிலத்தடி நீரின் அளவும் குறைந்துள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 2050 ஆண்டு ஆகும் போது உலகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் அதுவும் நீருக்காக மக்கள் அல்லல் படுவார்கள் எனவும் விஞ்ஞாணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அது மட்டுமன்றி அண்மையில் ஆர்ஜெண்டினாவில் நடை பெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டின் நீரியல் தின நிகழ்வின் போது ஒரு சொட்டு தண்ணீருக்கான விலை ஒரு சொட்டு பெற்றோலின் விலையை விட அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நீரின் முக்கியத்துவமானது தற்பொழுது குறைந்து கொண்டு செல்லுகின்றமையே ஆகும்.
ஆரம்ப காலங்களில் மக்கள் இயற்கயோடு அண்டிய வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் ஆனால் இன்றைய நவீன காலத்தில் மனிதர்கள் பெரும்பாலும் இயற்கையில் இருந்து விடுபட்டு செயற்கையான படைப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு இயற்கை வாழ்வாதார முறையினை இழந்தும் விடுகின்றனர். இதுவே நீரின் முக்கியத்துவம் குறைந்து செல்லுவதற்கு பிரதானமான காரணம் ஆகும்.
குறிப்பாக இலங்கை “இந்து சமுத்திரத்தின் முத்து” என்று அழைக்கப்படுவதற்கு காரணமாக அமைவதும் இலங்கையை சூழ கடல் நீர் உள்ளதேயாகும். எனினும் சாதரணமாக நாம் பருகும் குடிநீரானது ஆறுகள், ஏரிகள், குளங்கள், நதிகள் போன்ற பல நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரேயாகும். இதனை மக்கள் குளிக்க, சமைக்க, குடிக்க மற்றும் விவசாயம் போன்றவற்றிக்கு பயன்படுத்துவதுடன் பிரதானமாக நீர் மின்சார உற்பத்தியும் மேற்கொள்ளப்படுகின்றது.
அது மட்டுமன்றி எமது உடலில் சுமார் 75% உம் நீராகவே காணப்படுவதால் உணவுச் சமிபாடு, உடல் வெப்ப நிலை சீராகப் பேணல், தேவையான உறுப்புக்களுக்கு குருதியை கொண்டு செல்லல், வியர்வை, சிறு நீர் மூலம் கழிவுகளை வெளியேற்றல், மூளையின் சிறப்பான செயற்பாடு என்பவற்றிக்கு நீர் இன்றியமையாததாக காணப்படுகின்றது.
ஒரு மனிதனின் உடலில் 60% ற்கு மேல் நீர் உள்ளது அதில் 2.7 லீற்றர் எனும் மிகச் சிறிய நீரின் அளவு குறைந்தாலும் மனிதனின் உடலில் டிப்ரேசன், உடல் எரிச்சல், நடுக்கம், தலை வலி, மயக்கம், வயிற்றுப்புண் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் நீரின் இன்றியமையாத நிலைமை தெட்டத்தெளிவாக புலப்படுகின்றது.
இவ்வாறு நீரின் அவசியத்தை வலியுறுத்தியே அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னனான பராக்கிராம பாகு “ஒரு சொட்டு நீரையும் பயன்படாமல் கடலில் செல்ல விடக்கூடாது” என்ற வாசகத்தை கூட உரைத்திருந்தான் என்றும் கூறப்படுகின்றது.
அதனடிப்படையில் நீர் வளப் பாதுகாப்பை வலியுறுத்தும் முகமாகவே சர்வதேச நீர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. குடிநீர் தினமானது 1992 இல் பிரேசிலில் ரியோடி – ஜெனிரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பேரவைக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயற் திட்டத்தின் படி 1993 ஜனவரி 18 ம் நாள் 47 வது ஐக்கிய நாடுகள் பேரவைக் கூட்டத்தொடர் 199 ம் தீர்மானத்தையொட்டி நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22 ம் திகதி உலக குடிநீர் தினமாக கொண்டாடப்படுகிறது.
மேலும் சர்வதேச நீர் தினங்களுக்கான கருப்பொருளாக 2010 இல் தரமான நீர், 2011 இல் நகரங்களுக்கு தண்ணீர், 2012 இல் தண்ணீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு, 2013 இல் நீர் நிறுவனம், 2014 இல் நீரும் ஆற்றலும், 2015 இல் நீரும் நிலையான மேம்பாடும், 2016 இல் சிறந்த நீர் சிறந்த தொழிகள், 2017 இல் ஏன் நீரை வீணாக்க வேண்டும்? என்ற தொனிப்பொருகள் போதிக்கபட்டதுடன் 2018 இல் இயற்கைகாக நீர் என்ற கருப்பொருள் கொண்டும் சர்வதேச நீர் தினம் கொண்டாடப்படுகின்றது.
நீர் வளப் பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாடுகள் அரும் முயற்சியை மேற்கொள்கின்றன.ஆனால் இவற்றை தாண்டி நீரானது மாசுபடும் நிலை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொதுவாக நீரானது எரிமலை வெடிப்பு, அல்காப் பெருக்கம், புயல், நிலா நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களினால் ஒரு சில அளவிலேதான் மாசடைகின்றது.
நீரின் முக்கியத்துவம்: நீர் ஓர் உயிர் ஆதாரமாகும். Continue reading to Page 2
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More